Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு

பிப்ரவரி 06, 2021 09:37

தஞ்சாவூர்: தஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு மாதாக்கோட்டை லூர்துமாதா ஆலய தெருவில் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி காளைகள் திறந்துவிடப்படும் வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை 1 அடி உயரத்துக்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டு இருந்தன.

அதேபோல் காளைகள், பார்வையாளர் பகுதிக்குள் சென்றுவிடாதபடி தடுக்க இரும்பு கம்பிகள், சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. ஜல்லிகட்டில் பங்கேற்க தஞ்சை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் நேற்று இரவு முதலே தஞ்சைக்கு சரக்கு வேன் மூலம் அழைத்து வரப்பட்டன. இதேப்போல் மாடுபிடி வீரர்களும் அதிகாலை முதலே வரத் தொடங்கினர்.

கொரோனா தாக்கத்தால் மாடுபிடி வீரர்களுக்கு ஒரு நாளைக்கு முன்பு எடுத்த கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. இதனால் கொரோனா சான்றிதழ் சரிபார்த்த பிறகே மாடுபிடி வீரர்கள் ஒவ்வொருவராக களத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் காளையை அடக்க வந்த வீரர்கள் மது அருந்தி உள்ளனரா? புகையிலை பொருட்கள் வைத்திருக்கிறார்களா? என்ற வழக்கமான பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இதேப்போல் காளைகளுக்கு கால்நடை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். மொத்தம் 355 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். 655 காளைகள் களத்தில் இறக்கி விடப்பட்டன. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து ஒவ்வொரு காளையாக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அவைகள் துள்ளிக்குதித்து களத்துக்குள் வந்து சீறிப்பாய்ந்தது.

காளைகள் களத்தில் நின்று விளையாடியதை பார்வையாளர்கள் மெய்மறந்து கண்டு ரசித்தனர். பலர் அருகில் உள்ள வீடுகளின் மாடியில் நின்று கண்டு ரசித்தனர். இதேப்போல் காளையை வீரர்கள் அடக்கும் போது கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். ஒன்றுக்கு மேற்பட்ட வீரர்கள் காளையை பிடித்தபோது காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஒரு காளையை ஒரு வீரர் மட்டும் பிடித்தால் ஒருவர் பிடித்ததாக அறிவிக்கப்பட்டு சைக்கிள், அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. இதேப்போல் வெற்றி பெற்ற காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் பரிசை பெற்றுக் கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்